Sunday, December 28, 2008

துரோகமல்ல..


My Photo
நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக்கொள்வோம். கொசுக்கடிக்கு பயந்து  கொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசுவுக்குத் துரோகம் செய்தது ஆகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசுவாதம், கொசுத்துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால்   கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசு வலையை அறுத்தெரிந்து விட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டையர்களாக படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் 
தன் சொத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக் கொண்டு  பத்திரமாய்ப் படுத்திருப்பது  துரோகமாய்க்கூட தோன்றலாம்.  ஒரு சமயம் இதனால் அத்திருடன்  குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நம் பயந்து கொண்டோ, பரிதாபப் பட்டுக்கொண்டோ கதவை திறந்து போட்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்த தொழில் இனி நமக்கு பிரயோஜனப்படாது என்பதாகக் கருதி வேறுஏதாவது யோக்கியமான தொழிலில் ஈடுபட்டு யோக்கியமாக பிழைக்கக் கற்றுக்கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலம் நமது சொத்து பதுகாக்கப் படுவதன் மூலம் திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படுகிறது. ஆகையால் 
இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயோ எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக 
மாட்டோம். 

                                                    --தந்தைபெரியார்
                                                      [குடியரசு 6-2-1927]
நன்றி... பெரியார்தளம்

http://periyarthalam.blogspot.com

Monday, December 22, 2008

தி ரிட்டர்ன் ஆப் எமர்ஜென்சி - மணி / சீமான் கைது


தி ரிட்டர்ன் ஆப் எமர்ஜென்சி - மணி / சீமான் கைது.

இது ஒரு விசித்திரமான நாடு. உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடாகத் தனக்குத் தானே பெயர் சூட்டி பெருமைகொள்ளும் நாடு. ஆனால் நம் நாட்டின் செயல்களுக்கும் , சனநாயகத்திற்கும் சம்பந்தமேயில்லாதது தான் வேதனையிலும் வேதனை


இங்கே தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துடன் அரசாங்கம் அமர்ந்து பேசும். ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசுவதும் , அவற்றிற்கான தார்மீக ஆதரவையும் வழங்குவதற்காகவும் ஒரு சாராரை கைது செய்யும்.

பிரிவினைக் கோசம் எழுப்பி ஊர்வலம் போகும் காஷ்மீரத்து இளைஞர்களை கண்ணீர் புகைக் குண்டு வீசிக் கலைப்பதுடன் கண் மூடிக்கொள்ளும் இந்த அரசு. ஆனால் தடை செய்யப்பட்ட வேற்று நாட்டு இயக்கத்தை பற்றி பேசவே தடைவிதிக்கும்.

பக்கத்து நாட்டில் தங்கள் சகோதரர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே அதனை ஏனென்று கேட்கக்கூடாதா என்று கேட்டால் கண்டிப்பாக கேட்கிறேன் என்று தமது குடிமக்களையே அது ஏமாற்றப் பார்க்கும்.

ஒரு இனப்படுகொலையை தடுப்போம் என்று முழங்கும். ஆனால் அப்படுகொலையை தடுக்க முயல்வோர்களை ஆதரிக்காது. பாராமுகமாக இருக்கும்.

இப்படி ஒரு விசித்திரமான நாட்டின் ஒரு விசித்திரமான மாகாணம்தான் தமிழ்நாடு.

சுயநலக் கூட்டங்களும் , அடுத்த தேர்தலைத் தாண்டி உலகமே அழிந்துவிடப் போகிறது என்ற எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும் , இனமாவது , மண்ணாவது – எல்லாம் தன் கட்சிப்பதவிக்கும் , மக்கள் பிரதிநிதிகளாகவும் முன் தூசு என்ற மகா பரந்த எண்ணம் கொண்ட தமிழர்கள் தான் அதன் குடிமக்கள் அல்லது மாக்கள்.

இதில் ஜனநாயகம் என்பது அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவான முழக்கங்கள் ஒரு தரப்பிலும் , எதிரிக்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கங்களும் மட்டுமே கொண்டதொரு வெற்று சண்டை மடம்.

பிழைப்பென்று வந்தபின்னர் இதில் நாடென்ன , இனமென்ன ,

நலமென்ன , குறையென்ன ,

அவனென்ன , இவனென்ன??

எல்லா முழக்கங்களிலும் பிழைப்பையொட்டியே நிலையை எடுப்பது அரசியல் வியாபார காந்தங்கள் லேட்டஸ்ட் கார்ப்பரேட்களிடம் கற்று வந்த பாடம். 

நீ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை,ஆனால் அதைச் சொல்லும்

உனது உரிமைக்காக நான் உயிரைக் கொடுத்தும்போராடுவேன்” 

என்று வால்டேர் சொன்னாராம்.


கருத்துச்சுதந்திரத்தை நறுக்கென்று சொல்லும் இன்னொரு திருக்குறள் அல்லவா இது?

ஒரு இயக்கத்தைப் பற்றி அவதூறாகவும் , தூற்றியும் பேச இருக்கும் உரிமை அத்தகைய அவதூறுகளை கண்டிக்க இல்லையாம் .

என்னய்யா உங்கள் உரிமை?

பாகிஸ்தான் தீவிரவாதி இந்திய கோர்ட்டில் தனக்காக வாதிட இந்திய வக்கீலை வைத்துக் கொள்ளலாம் , அவனை நியாயப்படுத்திப் பேசலாம். வெளிநாட்டை சேர்ந்த ஒருவனை தன் அண்ணன் என்று அழைப்பது தவறாம் .

என்னய்யா உங்கள் நியாயம்?


சீமான் , கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் அவர்களைக் கைது செய்தமையானது கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயல். கட்சி வேறுபாடின்றி வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டிய செயல் இது!!!

எமர்ஜென்சியின் இன்னொரு முகம். இதில் வேடிக்கையென்றால் , எமர்ஜென்சியை எதிர்த்து போராடியதாகச் சொல்லும் தி.மு.க. சற்றேறக்குறைய அதே பாணியை கடைபிடிப்பதுதான்.

கூட்டணி தர்மத்திற்காக செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லிக்கொண்டாலும் , அது அக்கழகத்தின் அடிப்படைக்கே வேட்டு வைப்பது என்பதை இனிமேலாவது புரிந்து கொண்டால் சரிதான்.

ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டே ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்ததுதான் காங்கிரசின் வரலாறு. இதில் ஆச்சர்யமென்னவென்றால் , இப்போது அதே திசையிலேயே திமுகவும் பயணிப்பது தான்.

இதில் இன்னொரு வேடிக்கை, வழக்கமாக கருத்துச் சுதந்திரம் என்று கூப்பாடு போடும் பத்திரிகைகள் இப்போது இந்தக் கைதை வேடிக்கை பார்ப்பது. கருத்துச்சுதந்திரத்தை பாதுக்காக்கக் கூட தமக்கு உகந்த கருத்துக்களைச் சொன்னால் தான் குரல் கொடுப்போம் என்று நவீன நான்காம் தூண்களும் ஊமையாகிவிட்டன.

ஆனால் ஒன்று , எல்லாவற்றிற்கும் காலம் பதில் வைத்திருக்கிறது. அதைத்தான் நமக்கு வரலாறு கற்றுக்கொடுத்திருக்கிறது.

தமிழினம் தலைநிமிரும் காலம் வந்தே தீரும்.

அப்போது இந்தப் புல்லுருவிகளின் கோவணம் கிழிந்து அம்மணமாக ஓடத்தான் போகிறார்கள்.!!!

நன்றி-மதிபாலாபக்கங்கள் http://baluindo.blogspot.com/

Thursday, December 11, 2008

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

vps2

முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?

91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.

அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)

ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……

மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.

இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.

“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.

“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”

(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.

ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.

தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.

அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.

நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.

ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.

தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.

ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?

இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.

ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……

“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”

உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’

சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.

எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

சென்றுவா எம் நண்பனே.



நன்றி

http://pamaran.wordpress.com

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி போராடு வோம் :


* OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம்
* மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்
* இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம்
* பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்
* அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம்
* நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்
* பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம்
* எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்
* சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம்
* ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்
* நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிப்போம், வாருங்கள் நண்பர்களே!