Friday, October 31, 2008

ராமன் தேடிய சீதை

சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. “என்னை கொன்றுவிடாதீர்கள், நான் ஒரு பாவமும் அறியாதவள்” சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும் செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.
அப்பொழுது சத்தம் கேட்டு அங்கே அனுமானும், லக்குமணனும் மற்றவர்களும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த ராமன் சீதையை கருக்கிக் கொண்டிருந்த தீயை அணைத்தான். “சீதை தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கிவிட்டாள், நல்ல வேளை அக்கினிதேவன் காப்பாற்றி விட்டான்” ராமன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.
அப்பொழுது சீதை தப்பி விட்டாளே தவிர, அவளது வாழ்க்கை அதன் பிறகு நரகமாகி விட்டது. தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைப்பான். மிகக் கொடிய வார்த்தைகளால் அவளை துன்புறுத்துவான். சீதைக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாமல் போய்விட்டது. இடையிடையே சீதை தன்னுடன் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட ராவணனை நினைத்துக் கொள்வாள்.
ஒரு நாள் ராமன் குடித்துவிட்டு போதை தலைக்கேற ஆடியாடி வந்தான். சீதையைக் கண்மண் தெரியாமல் அடித்தான். அவளை இனிமேல் தன்முன் நிற்கக் கூடாது என்று சொல்லி காட்டுக்கு விரட்டி விட்டான். காட்டில் உள்ள மிருகங்களுக்கு சீதை பலியாகட்டும் என்று நினைத்துக் கொண்டான்
ஆனால் சீதை காட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டாள். அங்கே இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். செய்தி ராமனை எட்டியது. ராமனுடைய சந்தேகம் மேலும் அதிகரித்தது. சீதையை இனியும் உயிருடன் விடக் கூடாது என்று நினைத்தான். காடெல்லாம் தேடி அலைந்தான். ஆனால் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நேரத்தில் சலித்துப் போய் சீதையை தேடுவதை ராமன் கைவிட்டுவிட்டான். தன்னுடைய வெறியை குடித்தும் பெண்களுடன் கும்மாளமிட்டும் ஆற்றிக் கொண்டான். கிண்ணரி, உதமா, நாட்டியப் பெண்கள், வேலைக்காரப் பெண்கள் என்று யாரையும் ராமன் விட்டு வைக்கவில்லை. அனைவரிடமும் தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டான்.
ஒரு நாள் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்ற ராமனின் படைவீரர்கள் ராமன் தேடிய சீதையை கண்டு விட்டனர். ராமனிடம் ஓடிச் சென்று, அவன் தேடிய சீதையை கண்ட செய்தியை சொன்னார்கள். ராமன் வெறியோடு காட்டுக்கு புறப்பட்டான்.
இந்த முறை சீதையால் தப்ப முடியாது போய்விட்டது. சீதை ராமனிடம் அகப்பட்டு விட்டாள். ராமன் சீதையை கடுமையாக சித்திரவதை செய்தான். சீதை பலவாறு கெஞ்சியும் விடவில்லை. சித்திரவதை தாளாது சீதை மூர்ச்சித்துவிட்டாள். ராமன் ஒரு குழியை தோண்டி அதற்குள் போட்டு சீதையை மூடினான்.
“சீதை பூமாதேவியன் மகள் அல்லவா! அதனால் பூமியே பிளந்து சீதையை உள் வாங்கிக் கொண்டது” சில காலம் கழித்து அயோத்தியில் மக்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.


- வி.சபேசன்
நன்றி வெப்ஈழம்

Tuesday, October 28, 2008

ஜெயலலிதாவின் சூழ்ச்சி-காங்கிரசின் மகிழ்ச்சி

தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.
‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
***
தமிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.
‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.


-வே. மதிமாறன்

Wednesday, October 1, 2008

மின்சாரம்

இருளில்
கிராமங்கள்!
நகர சுடுகாட்டில்

மின் தகனம்!
கா.இளையராஜா