Monday, June 30, 2008

தோழர்களே...

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.....
- சே குவேரா
ஆயிரம் சாமிகள் அலமாரியில்
முன்னறி தெய்வங்கள்
முதியோர் இல்லங்களில்.
-பாவலர் வையவன்

வாழ்க்கை

தம்மைத் தாம் பெரிதாகவும்,தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டு மென்றும் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும் வருவாயும் வந்தாலும் ஆசையால் மனம் வாடிச் சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன்காரர்களாகவும் தான் இருப்பார்கள். ஆதலால் வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமே ஆகும். என்னை நான் சின்னவன் என்றும்,குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக்கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே யழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதேபோல் மனதைகட்டுப்படுத்தச் சக்தி இருந்தால் எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
- தந்தைபெரியார்

Wednesday, June 25, 2008

5 பாடத்திலும் 100/100 - கல்லூரி மாணவி சாதனை.

திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.
இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.
இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்
- தந்தை சிறு பாத்திர வியபாரி- தயார் பனியன் கம்பெனியில் வேலை- +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்- தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.
தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.
தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.
புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.
வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர், என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன்.
கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்
வகை: 100/100, L R G Govt Arts, சாதனை, தமிழ் வழிக் கல்வி

இமயமலையைக் கெடுக்கிறார்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மலைப் பகுதியில் அமர்நாத் குகையில் பனி லிங்கம் என்பார்கள். இதைப் பார்க்கப் பெருங்கூட்டமாக இந்துக்கள் போகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை மதச்சார்பற்ற இந்திய அரசு செய்து தருகிறது. இதற்கு வரும் இந்துக்களைக் கவனித்து அனுப்புவதற்காகத் தனியே ஒரு வாரியம் உள்ளது. சிறீ அமர்நாத் கோயில் வாரியம் எனப் பெயர். இதன் தலைவர் மாநில ஆளுநர், இப்போதிருப்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.இந்தப் பனி லிங்கம் என்பதே ஒரு புருடா. சுண்ணாம்புக் கற்களில், குகைகளில், குளிர் காலத்தில் வடியும் நீர் பட்டு இப்படிப்பட்ட பலவகை உருவங்கள் உருவாகும். குகைகளின் மேலிருந்து கீழாகவும், தரையில் இருந்து மேல் நோக்கியும் உருவாகும். மேலிருந்து கீழாகக் கூர்முனை உள்ளவை Stalactite என்றும் கீழிருந்து மேலாக வளர்பவை என்றும் கூறப்படுகின்றன. Iciclelike deposit mounting upwards from the floor of a cave as water containing lime dripping from above என்பதுதான் லிங்கம் எனப்படுகிறது. அமர்நாத்தில் அறிவியல் அறிவு இல்லாத இந்துக்களை இதைக்காட்டி ஏமாற்றி வயிற்றைக் கழுவுகிறது ஓர் அயோக்கியக் கும்பல். அதற்குத் துணை போனவர் இந்த மாநில ஆளுநர். இது இமயமலையில் மட்டும் இல்லை. நியூசிலாந்தில் இருக்கிறது, கிரீஸில் இருக்கிறது. பல நாடுகளில் உள்ளது.போன ஆண்டு லிங்கம் வளரவில்லை. என்ன செய்தார் தெரியுமா அந்த ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்? குச்சி அய்ஸ் தயாரிப்பதைப் போல, அய்ஸ் கட்டிகளை அப்பி லிங்கத்தை மொத்தமாக்கினார். அதுவும் கூட கரைந்து போய், உள்ளே இந்த எத்தர்கள் உருவாக்கி வைத்த சிமென்ட் கட்டை வெளியே தெரிந்துவிட்டது. ஆக, சிமென்டில் கட்டப்பட்ட உருளைக் கட்டையின் மீது சுண்ணாம்பு நீர் கொட்டி, ஸ்டாலக்மைட் உருவாவதை இவர்கள் பனிலிங்கம் எனப் புளுகி மடமையை வளர்க்கின்றனர்.போன ஆண்டின் அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு லிங்கத்தின் உயரத்திற்கும் மேலே இரும்புக் கம்பிக் கூண்டு அமைத்து வைத்துள்ளனர். பக்த கே()டிகள் தொட்டுத் தொட்டு, பனி கரைந்து போய்விட்டது சென்ற ஆண்டு! ஆகவே தடுப்பு வேலி! அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.ஆளுநர் மாற்றப்பட்டு விட்டார் புதிய ஆளுநரும் நியமிக்கப்பட்டுவிட்டார். பழைய ஆள் இடத்தைக் காலி செய்யாமல் அழிச்சாட்டியம் செய்கிறார். மய்ய அரசும் மவுனமாக இருக்கிறது. என்னமோ நடக்குது! ஒண்ணுமே புரியலை!இந்நிலையில் மாநில முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், பனிலிங்க வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறார். அது தனியார் நிலமா? இல்லை, அரசு நிலமா? இல்லை. அது காட்டிலாகா நிலம்! அதைக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? கிடையாது. பின் எப்படிக் கொடுத்தார்?இந்திய வனச் சட்டத்தின்படி ஒரு ஏக்கர் வனத்துறை இடத்தை எதற்காவது அரசே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் இருமடங்கு நிலம் (அதாவது இரண்டு ஏக்கர்) தந்தால்தான் தொடமுடியும். அந்தச் சட்டப்படி, 100 ஏக்கர் நிலத்தைப் பனிலிங்க வாரியத்திற்கு மாநில அரசு தந்தது என்றால், 200 ஏக்கர் அரசு நிலம் வனத்துறைக்குத் தந்திருக்க வேண்டும், தந்தார்களா?காட்டிலாகா நிலங்களையாருக்கும் தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவே போட்டிருக்கிறது. மீறி கொடுத்துள்ளனர்.ராஜா தவறு செய்யமாட்டார்.‘King can do no wrong’ என்று ஒரு சொலவடை இங்கிலாந்தில் இருந்தது. தவறு செய்த ராஜாவைக் கொன்ற நிகழ்ச்சியும் அங்கேயே நடந்தது. ஜனநாயகத்தில் அரசு தவறு செய்தால் அய்ந்தாம் ஆண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்.சென்ற ஆண்டு லிங்கம் வளராமல் போனதற்கான காரணம், பக்தர்கள் கொட்டிய குப்பையும், கொளுத்திய விறகும் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியதால்தான் என்று அறிவியல் கூறியது. இந்நிலையில் அங்கு 100 ஏக்கரில் வீடுகளும் கட்டப்பட்டு, இந்துக்கள் குடியும் குடித்தனமுமாக இருந்தால் - சுற்றுச்சூழல் என்னாவது? குலாம் நபி ஆஜாத்துக்குக் கவலையில்லை. யாரையோ திருப்திப்படுத்த இமயமலையையே கெடுக்கிறார்.மக்கள் எதிர்க்கிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மாநில அரசு கண்ணீர்ப்புகை வெடித்துத் தடியடி நடத்துகிறது. போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி, பா.ஜ. கட்சி எதிர்ப் போராட்டம் என்கிறது.மொத்தத்தில் இமயமலை கெடுக்கப்பட்டுவிட்டது.

அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாக உள்ளதாக, லண்டன் அல்ஏடெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு இறை நம்பிக்கை மிக மிகக் குறைவு. தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு தங்களது திறனே காரணம். இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றே பெரும்பாலான பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.பிரிட்டினில் ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சிப் பெறப்பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாக குறைய ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் 20-ம் நூற்றாண்டில் 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கள் அறிவாளிகளாக மாறி வருவதே இதற்குக் காரணம்.பிரிட்டனில் 3.3 சதவீதம் பேர்தான் இறை நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கை தவிர்த்து வேறெந்த நம்பிக்கையும் இல்லை என தெரிவித்ததாக இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு லைன் தெரிவித்தார்.நன்றி :

‘தினமணி’ 13.6.2008

Thursday, June 12, 2008

கடவுள் இல்லாத சர்ச்சுகள் வேண்டும்

‘மதம், கடவுள்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்ற இந்த நம்பிக்கைதான், அமெரிக்காவில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இது பற்றி ‘ஜீண்மெக்னேகு’ எனும் நியூயார்க் பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத நம்பிக்கை தொடர்பாக நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 16 சதவீத அமெரிக்கர்கள், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கை கிடையாது என்று கூறியுள்ளனர். 18-லிருந்து 29 வயதுள்ள இளைஞர்களில் 25 சதவீதம் பேர் தங்களை மத மற்றவர்கள் என்றும், எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது என்றும் கூறியுள்ளனர். 1986 ஆம் ஆண்டு இதே போல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மத நம்பிக்கை இல்லை என்று 11 சதவீதம் பேர் மட்டுமே கூறியிருந்தனர். அமெரிக்காவில் நாத்திகர் குழுக்கள் - அரசும், சர்ச்சும், பிரிந்தே நிற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்க நாத்திக கழகத்தின் தலைவராக உள்ள எல்லன் ஜான்சன் கூறுகையில், “நாங்கள் சுதந்திரமானவர்கள்; எந்த அமைப்பிலும் நாங்கள் இணைத்துக் கொள்ள மாட்டோம்; அப்படி அமைப்பு தேவைப்பட்டால் நாங்களே உருவாக்கிக் கொள்வோம்” என்று கூறுகிறார். கடவுள் எதிர்ப்பு என்பதோடு மட்டும் நின்று விடாமல், டார்வின் பரிணாமக் கொள்கை மற்றும் பொது நெறிகளை மக்களிடையே பரப்ப வேண்டும் என்று அமெரிக்க நாத்திகர்கள் கருதுகிறார்கள்.
மதங்கள் இப்போதும் ஏன் உயிரோடு இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு அமெரிக்க நாத்திக சிந்தனையாளர்கள் கூறும் பதில் இது தான். அவர்களுக்கு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், உடைமைகள், வாரிசுகள், சடங்குகள், பணம், மதப் பிரச்சாரகர்கள் மற்றும் இறப்புக்குப் பிறகு இருப்பதாகக் காட்டப்படும் உலகம் - இவைகள்தான் மதங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளன. இதனால் சர்ச்சுகள் - தேவைகளைப் பூர்த்தி செய்யும் மய்யங்களாக செயல்படுகின்றன. அதேபோல் நாத்திகர்களுக்கும் கலாச்சார மய்யங்கள் வேண்டும் என்கிறார், ஹார்டுவேர்டு பல்கலைக்கழக பேராசிரியரும் நாத்திகருமான கிரேக் எப்குடின். ‘விஞ்ஞானமும் பகுத்தறிவும் அவசியத் தேவை; ஆனால் இந்த சிந்தனைகள், மருத்துவமனைக்கு போய் ஆறுதல் சொல்ல உடன் வராது. எனவே மதமற்ற மனித சேவைகளுக்கான கலாச்சார மய்யங்கள் நாத்திகர்களுக்கு வேண்டும்’ என்று அவர் கூறுகிறார். பல நாத்திகர்கள் - “சர்ச் கட்டிடங்கள் நாத்திகர்களுக்கு தேவை. ஆனால், அதில் கடவுள் மட்டும் இருக்கக் கூடாது” என்று கூறுகிறார்கள். - இவ்வாறு அந்த அமெரிக்க பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது